Monday, February 21, 2011

காப்பாற்றும் தாழ்ப்பாள்!

தினமும் செய்திதாளைப் பார்த்தால் குறைந்தது ஒரு திருட்டு செய்தியோ அல்லது திருடனைப் பற்றி செய்தியோ வந்திருக்கும். அதைப் படித்ததும் எங்கே நமக்கும் அது போல் அனுபவம் (அதாவது நம் உடைமைக்கும் அது போல் திருட்டு) நடந்திடுமோன்ற பயத்தில் கொஞ்ச நாளைக்கு நம்ம நிம்மதி திருட்டு போய்டும் :( அதுவும் நம் கற்பனை குதிரைக்கு கேட்கவே வேண்டாம்... வீட்டில் தனியா இருக்கும்போது ஒரு சின்ன சத்தம் கேட்டுச்சு...அவ்வளவுதான்... அந்த மாதிரி சமயங்கள்ல கொஞ்சம் தைரியத்தை வரவழச்சுட்டு எல்லா அறைகளையும் செக் பண்ணிட்டு நேரா போனை எடுத்து (தெரிஞ்சவங்க) யாருக்காவது ப்ளேடு போட ஆரம்பிச்சுடுவேன் ;)... பயம் பறந்துடும்... நாலு நல்ல விஷயங்களை அவங்களோட பகிர்ந்திட்ட மாதிரியும் இருக்கும் ;)

எல்லாரும்
நல்லாருக்கணும்!!
 சில நாட்களுக்கு முன் நாளிதழில் வாசகர் கடிதத்தில் ஒருவர் தன் வீட்டில் நடந்த நூதன திருட்டைப் பற்றி எழுதியிருந்தார். அவருடைய மனைவி காலை 9 மணிக்கு வீட்டில் தனியே இருந்திருக்கிறார். நல்லா தூங்கிட்டு... தூக்கத்திலயும் அந்த அம்மா கொஞ்ச உஷாராத்தான் இருப்பாங்க போலிருக்கு... வீட்டில் யாரோ நடமாடுற சத்தம் கேட்டு முழிச்சிருக்காங்க... ஒரு ஆள் அவங்க இருந்த அறைக்கு எதிர் ஆறைக்குள்ள நுழையறத பார்த்திருக்காங்க... அப்பா... எனக்கு வாசிக்க வாசிக்க பக் பக்குனு ஆயிடுச்சு... அப்ப உங்களுக்கு?

அவங்க நல்ல நேரம் திருடன் அவங்க அறைக்குள்ள நுழையாம அவங்க குழந்தைகள் அறைக்குள் போயிருக்கான். அத பார்த்ததும் இந்த அம்மா தன் அறையைப் பூட்டிட்டு அவங்க பக்கத்தில இருந்த போனில் அவங்க கணவருக்கு விஷயத்த மெல்ல சொல்லியிருக்காங்க... அவர் உடனே போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்காங்க... அதுக்கப்புறம் இந்தம்மா சத்தம் போட்டாங்கன்னும் தன் கடிதத்தில் எழுதியிருந்தார். திருடனைப் பிடித்ததைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

திருடன் வீட்டு லாக்கை உடைத்துவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி சமயத்தில் அந்த அம்மா அறையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் இருந்ததே கொஞ்சம் ஆபத்தானதுதான். வீட்டு லாக்கையே உடைத்தவனுக்கு அறையின் லாக்கை உடைக்க வெகு நேரம் ஆகாது.  அவன் அறியாதபடி அவர் வெளியே சென்றிருக்க வேண்டும்.

பில்டிங் செக்யூரிட்டியின் கவனக்குறைபாடுதான் இதில் முதல் தவறு. புதியதாக ஒருவர் கட்டிடத்தில் நுழையும்போது அவனைக் கொஞ்சம் விசாரித்திருந்தால் அவன் வந்த வழியே சென்றிருப்பான்.

வாசகர் குறிப்பிட்டிருந்த காரணமும் கவனத்தில் வைக்க வேண்டிய ஒன்றுதான். அதாவது அவருடைய வீட்டில் டீவி சத்தமோ மற்ற பேச்சு சத்தமோ கேட்காததும் ஆளில்லாத வீடு என நினைத்து திருடனை வீட்டில் நுழையச் செய்திருக்கலாம்.

அனுபவம் தந்த பாடத்தில் அவர் தந்த தீர்வும் நல்லதாகப் படுகிறது. அதாவது வீட்டு கதவு லாக் தவிர்த்து ஒரு தாழ்ப்பாளும் வைத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை என்றிருந்தார்.

ஆனால் இதிலும் என் மூளைக்கு ரெண்டு குறை தோணுது : (
1. அலுவலகம்/பள்ளி முடிந்து வரும் கணவர்/குழந்தையிடம் சாவி இருந்தாலும் வீட்டினுள் இருப்பவர் போய் கதவைத் திறக்கும் வரை அவர் வெளியே காத்திருக்க வேண்டும்.
2. தாழ்ப்பாள் போட்ட சமயத்தில் வீட்டினுள் தனியாக இருப்பவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் வெளியே இருந்து யாரும் காப்பாற்ற சிறிது சமயமெடுக்கும்.

என்ன பண்றது... கொலை, கொள்ளை போன்ற பெரிய இழப்புகளைத் தவிர்க்க இது போன்ற சின்ன சின்ன அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதெல்லாம் சரி...வீட்டைப் பூட்டிட்டு குடும்பத்தோடு வெளியூர் போகும்போது என்ன பண்றதுன்னு தானே நினைக்கிறீங்க... வேறு வழியில்லை... வீட்டிலிருக்கும் நகை,பணத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிட்டு செல்வதைத் தவிர வேறு ஒண்ணும் செய்ய முடியாது :(

என் சந்தேகம் தான் தீர்ந்த பாடில்லை. வீட்டு லாக்கை உடைக்கும் வரை அவன் யார் கண்ணிலும் படவேயில்லையா/யாருக்கும் கேட்கவேயில்லையா? :(

இந்த கடிதத்தைப் படித்ததும் செய்திதாளில் முன்பு படித்த மற்றொரு சம்பவமும் ஞாபகம் வந்துச்சு. பெண் ஒருவர் தன் குழந்தையுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும் போது வீட்டு லாக் உடைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் உஷாராகி மெதுவாக வீட்டினுள் எட்டிப் பார்த்தால் ஒரு பெண் அவர் அறையிலிருந்த பீரோவை உடைத்து கொள்ளையடித்துக் கொண்டிருந்திருக்கிறாள். இவர் கொஞ்சமும் பயப்படாமல் அவளின் பின்னே சென்று அந்த பெண்ணைக் கையும் களவுமாக பிடித்திருக்கிறார். அந்த தைரியசாலியின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். நல்ல குண்டுகுண்டுன்னு இருந்தார். கொஞ்சம் நோஞ்சானாக இருந்திருந்தால் திருடி இவரைத் தாக்கியிருக்கலாம். குண்டா இருக்கிறதிலயும் ஒரு நன்மை இருக்கு ;)

எங்கள் வீட்டிலும் இந்த தாழ்ப்பாள் உண்டு... ஒரு முறை வீட்டில் தனியாக இருந்த சமயம் வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஏற்கனவே பூட்டியிருந்த தாழ்ப்பாளை நன்றாக பூட்டிவிட்டு 'யாரது?' என்று கேட்டேன் (நாங்கள்லாம் படு உஷாருல்ல:) ) பதிலில்லை... இரண்டு மூன்று முறை கேட்டும் தட்டுவதைத் தவிர பதில் சொல்லவில்லை... நீங்க நினைக்கலாம்...லென்ஸ் வழியா பார்க்கலாமேஏன்னு... எங்க வீட்டுக் கதவுக்கு லென்ஸ் கிடையாது... ஹி..ஹி..ஒரு வேளை தமிழ் தெரியாத திருடனாயிருக்குமோ:( 'who's this' என்று கேட்டேன்.. 'it's me' என்றாள் கீழ் வீட்டிலிருக்கும், எங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வந்து விளையாடிச் செல்லும், அரபிச் சிறுமி...;)

25 comments:

அரபுத்தமிழன் said...

//ப்ளேடு போட ஆரம்பிச்சுடுவேன்//
இதைத்தான் திருடர்களும் செய்கிறார்கள் :)))

அரபுத்தமிழன் said...

தாழ்ப்பாள் போடுவது சுன்னத்து. ஆனால் (அதன் மீது)
நம்பிக்கை வைப்பது ஆபத்து.

ஹுஸைனம்மா said...

அவ்வ்வ்வ்.... நானே அத இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா மறந்திருந்தேன்... மறுபடியும் ஞாபகப் படுத்தி.. அய்யய்யோ... கதவு ஆடறமாதிரி இருக்கே...

ஜெய்லானி said...

வீட்டுக்கு நல்ல குவாலிட்டியான லாக் வாங்கி போடனும் .

யாரா இருந்தாலும் உடனே கதவை திறக்காம யாருன்னு கேட்டு சரியான பதில் கிடைச்சா மட்டுமே கதவை திறக்கனும் .

பெண் மட்டுமே வீட்டில் இருந்தால் கதவை திறக்காமல் கூடுமானவரை அப்படியே பேசி அனுப்பிடனும் . இதனால் தேவையில்லாத குழப்பங்கள் தவிர்க்கலாம் :-)

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...! நல்ல பகிர்வு பானு. இந்த திருட்டு பயமெல்லாம் இரவில்தான் அதிகமா நமக்கு வரும். பேய், பிசாசு பயமெல்லாம் இல்லாத நமக்கு ஒரு பூனை குதித்தாலும் திருடன் பயம் வந்து நமக்கு தூக்கமே வராது, அப்படி ஒரு தைரியம் :))

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றால் வீட்டுக் கதவு திறக்கப்படும்போது நம் செல்லுக்கு மெஸ்ஸேஜ் வரும்படி ஒரு சிஸ்டம் இருப்பதாக எங்கோ படித்தேன். ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.

Ram said...

கடைசியில காமெடி சொன்னீங்களா.??? ஓ.. ஹா ஹா ஹா.. சிரிச்சிட்டன்..

எங்க வீட்டுகிட்ட ஒரு திருட்டு.. அது ஒரு அப்பார்ட்மன்ட்.. நைட் 2 மணிக்கு கீழ இருக்குற எல்லார் வீட்லயும் வெளில லாக் பண்ணிட்டு ஆளில்லாத ஒரு வீட்ல திருட போயிருக்காப்புல நம்ம திருடர்.. அந்த சமயத்துல வெளிய எழுந்துவந்த ஒருவர் கதவை திறக்கமுடியாததை பாத்து பக்கத்துவீட்டுகாரருக்கு போன் அடிக்க அவராலும் திறக்கமுடியாமல் போக போலீஸ்க்கு போன் அடித்திருக்கின்றனர்.. பர பரவென வந்த போலீஸை கண்ட திருடர் வேறு வாசல் வழியாக தப்பித்து எதிர்ஃ தனிவீட்டில்ஃ தஞ்சம் புகுந்துள்ளார்.. நைட் பூரா தேடியும் போலீசால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.. காலையில் பார்த்தால் அவர் அந்த எதிர்வீட்டில் அமைதியாக இருந்து நைட் சாப்பாடு முடிச்சிட்டு திருடிட்டு போயிருக்கார்.. அவங்க வீட்ல முந்தைய நாள் நைட் தான் ஊருக்கு போனாங்களாம்..

enrenrum16 said...

ஸலாம் அரபுத்தமிழன்///ப்ளேடு போட ஆரம்பிச்சுடுவேன்// இதைத்தான் திருடர்களும் செய்கிறார்கள் :)))/ ஹி..ஹி.. ஆனா நாம போடுற பிளேடுல கேட்கிறவங்க மனசுக்கோ உடமைக்கோ ஆபத்தில்ல :)

/தாழ்ப்பாள் போடுவது சுன்னத்து. ஆனால் (அதன் மீது)நம்பிக்கை வைப்பது ஆபத்து./ உண்மைதான்...:)

enrenrum16 said...

ஸலாம் ஹுஸைனம்மா... அய்யய்யோ... கதவு ஆடறமாதிரி இருக்கே... / புரட்சி தலைவி வீட்டுக்கே திருடனா?;) அப்படியே திருடன் வந்தாலும் அவனை பேசியே திருத்திட மாட்டீங்க?:)

enrenrum16 said...

ஸலாம் ஜெய்லானி... நல்ல அறிவுரைகள்... அப்படி பேசும்போது குரலில் சிறிது கண்டிப்பையும் காட்டுவது நல்லது. வருகைக்கு நன்றி.

enrenrum16 said...

ஸலாம் அஸ்மா... /பூனை குதித்தாலும் திருடன் பயம் வந்து நமக்கு தூக்கமே வராது, அப்படி ஒரு தைரியம் :)) /.. அட நீங்களும் நம்ம கட்சிதானா...;)

/வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றால் வீட்டுக் கதவு திறக்கப்படும்போது நம் செல்லுக்கு மெஸ்ஸேஜ் வரும்படி ஒரு சிஸ்டம் இருப்பதாக எங்கோ படித்தேன். ஞாபகம் வந்தால் சொல்கிறேன்./.. நிஜமாவா... அதுல ஏதும் தில்லாலங்கடி வேலைகள் எடுபடாமல் இருந்தால் நல்லது :)

enrenrum16 said...

வாங்க மதி... நல்லா வாய்விட்டு சிரிச்சீங்களா? உங்களுடைய கஷ்டமான வேலைக்கு நடுவேயும் அப்பப்ப இது மாதிரி சிரிச்சா டென்ஷன் பறந்துடும்..ஓகேவா?

/காலையில் பார்த்தால் அவர் அந்த எதிர்வீட்டில் அமைதியாக இருந்து நைட் சாப்பாடு முடிச்சிட்டு திருடிட்டு போயிருக்கார்.. / அடப்பாவி..உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிட்டு போயிட்டானே :( [திருடனைக் கூட இவ்வளவு மரியாதையா சொல்றீங்களே... நீங்க ரொம்ப நல்லவங்க...:)]

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

மொத்தத்தில் வீட்டில் விலைஉயர்ந்த் நகைகள் வைத்திருப்பதை தவிர்ர்க்க வேண்டும்.வங்கி பாதுகாப்புப் பெட்டியில் வைக்கலாம்.அதிலும் ஆள் இல்லாத வீட்டில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.அவசிய பதிவு பானு.

Jaleela Kamal said...

படிக்க படிக்க எல்லாமே பக் பக்குன்னு இருந்துச்சு, பையன் கிட்ட சொல்லி நல்ல பூட்டிக்கோன்னு சொல்லனும், இப்ப ஒரு பயம் வேர எல்லோரும் ஆபிஸ், ஸ்கூல் போனதும் நான் கடைசியா போர ஆள், முதல்ல கதவ பூட்டிக்கனும். சின்னதா கதவு தம்முன்னாலும் பே பே பே ந்னுவ, மெதுவா போய் திறந்து பார்ப்பேன்.

Jaleela Kamal said...

படிக்க படிக்க எல்லாமே பக் பக்குன்னு இருந்துச்சு, பையன் கிட்ட சொல்லி நல்ல பூட்டிக்கோன்னு சொல்லனும், இப்ப ஒரு பயம் வேர எல்லோரும் ஆபிஸ், ஸ்கூல் போனதும் நான் கடைசியா போர ஆள், முதல்ல கதவ பூட்டிக்கனும். சின்னதா கதவு தம்முன்னாலும் பே பே பே ந்னுவ, மெதுவா போய் திறந்து பார்ப்பேன்.

enrenrum16 said...

ஸலாம் ஸாதிகாக்கா.. நீங்க சொல்றது ரொம்ப சரி... ஆனா நிறைய பேர் வங்கியில் நகையை வைப்பதை பெரிய வேலையாக நினைக்கிறாங்க... லாக்கருக்கு பணம் கொடுக்கிறது, நினைத்த நேரத்தில் எடுக்க முடியாதுன்னு நிறைய காரணங்கள் சொல்லி அதனோட பாதுகாப்பை உணரமாட்டேங்கறாங்க :( .. அப்புறம் அவஸ்தைப் படறாங்க... உங்க கருத்துக்கு மிக்க நன்றி...

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..
நல்லா இருக்கீங்களா?
தாழ்ப்பாள் குறித்த விழிப்புணர்வு பதிவு..சுவாரஸ்யமா எழுதீர்க்கீங்க..

அதெப்படி உங்களுக்கு மட்டும் ஒன்னத்தொட்டு ஒன்னு நியாபகம் வந்துக்கிட்டே இருக்கு..

/ஏற்கனவே பூட்டியிருந்த தாழ்ப்பாளை நன்றாக பூட்டிவிட்டு 'யாரது?' என்று கேட்டேன் (நாங்கள்லாம் படு உஷாருல்ல:) )/

உஷார் தான்..படிக்கும் போது சிரிப்புதா வந்தது..பாருங்க இந்த திருட்டு பசங்களால,வீட்டுக்கு வர்ர சில்லுவண்டுக்கெல்லா நீங்க பயப்புட வேண்டியதா போச்சு...கடைசில கதவ தொரந்தீங்களா இல்லையா??

இது மாதிரி யாருன்னு தெரியாதவங்க கதவ தட்டுனா..

நீங்க ஒரு கேள்வி கேக்கலாம்...
”உங்கம்மா மேல சத்தியமா நீ திருடன் இல்லைன்னு சொல்லு அப்பதா கதவ தொரப்பேன்னு..”இது எப்டி இருக்கு..

இல்லைன்னா..வீட்டுக்குள்ள வந்து எங்க பீரோல்ல இருக்குற நகையையும்,ரூம்ல இருக்குற பணத்தையும் ஒன்னும் பண்ண மாட்டேன்னு சொல்லு அப்பதா கதவ தொரப்பேன்னு ஒரு குண்ட போடுங்க..
வாக்கு குடுத்தா திருடனா இருந்தாலும் காப்பாத்திதான அஹனும்..ம்

ம்ம்..நாங்கள்ளா அப்டி..

அன்புடன்
ரஜின்

enrenrum16 said...

ஸலாம் ஜலீலாக்கா... /சின்னதா கதவு தம்முன்னாலும் பே பே பே ந்னுவ, மெதுவா போய் திறந்து பார்ப்பேன்./ நீங்க இதை சொன்னதும் எனக்கு இது ஞாபகம் வந்துடுச்சு... 'பார்த்த முதல் நாளே' அப்படீன்ற பாட்டு அப்ப டீவியில் அடிக்கடி போடுவாங்க.. அந்த பாட்டுல எங்க வீட்டு காலிங் பெல் சத்தம் (கிளி சத்தம்) மாதிரியே இடையில் ஒரு ம்யூசிக் வரும்... அது தெரியாம கதவைத் திறந்து யாருமில்லாதத பார்த்து பலநாள் பயந்திருக்கேன் :(... இப்ப அத நினச்சா சிரிப்பு வருது ;)

/சின்னதா கதவு தம்முன்னாலும் பே பே பே ந்னுவ, மெதுவா போய் திறந்து பார்ப்பேன்./.. அனுபவ,தைரியசாலிகள் இப்படியெல்லாம் பயப்படலாமா.. எங்களுக்கு நீங்கதானே சமையல் மாதிரி தைரியத்திலும் முன்மாதிரியா இருக்கணும் ;)

வருகைக்கு மிக்க நன்றிக்கா.

enrenrum16 said...

/ஸலாம் சகோ.நல்லா இருக்கீங்களா?/ வ அலைக்கும் ஸலாம்... அல்ஹம்துலில்லாஹ்...

/அதெப்படி உங்களுக்கு மட்டும் ஒன்னத்தொட்டு ஒன்னு நியாபகம் வந்துக்கிட்டே இருக்கு..//ஹி..ஹி.. அப்படியே ஞாபகங்களை வாரி வழங்குவோம்ல ;)

/வீட்டுக்கு வர்ர சில்லுவண்டுக்கெல்லா நீங்க பயப்புட வேண்டியதா போச்சு.../அவ்வ்வ்வ்வ் :( /கடைசில கதவ தொரந்தீங்களா இல்லையா??/ ஆமா..அவ எங்க வீட்ல இருக்கிற வரைக்கும் கொஞ்சம் பயமில்லாம இருந்தேன் ;)

ரஜின்... இதுக்கப்புறம் திருடன் கூட என்னை பேச்சுவார்த்தை நடத்த சொல்லி ரெண்டு ஐடியா சொல்லியிருக்கீங்க பாருங்க... விழுந்து விழுந்து சிரித்தேன்.. ஆனாலும் நீங்க இப்டி வெகுளியா இருக்கக்கூடாது :)அடுத்தவன் பணத்துக்கு ஆசைப்படறவனுக்கு ஒரு பொய் சொல்ல எவ்வளவு நேரமாகப்போகுது?:(

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நல்ல விழிப்புணர்வு பதிவு

வாழ்த்துக்கள் சகோ

enrenrum16 said...

@ஹைதர்
வ அலைகும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

apsara-illam said...

சலாம் சகோதரி..,நல்ல பயனுள்ள பகிர்வுதான் போட்டிருக்கீங்க...
ஆனால் எல்லோருக்கும் கைகால் உதரி எடுக்குதுல்ல...(லேசா எனக்கும்தான்)
எனக்கும் திருடர்கள் பயம் இருக்கும்.ஆனாலும் பெரும்பாலும் வெளிகாட்டி கொள்வதில்லை.அதனாலேயே மனசு தைரியமாக இருப்பதை போல் நினைப்பை ஏற்படுத்திக் கொள்வேன்.
அதையும் தாண்டி எல்லாம் வல்ல இறைவனை தான் நாம் நம்பி இங்கு தனியே இருந்து கொண்டிருக்கின்றோம் என்ன செய்ய?

அன்புடன்,
அப்சரா.

enrenrum16 said...

ஸலாம் அப்சரா... நானும் பல சமயங்கள்ல திருடன் பற்றிய பயம் வந்தால் இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு என் கவனத்தைத் திசை திருப்புவேன்.அதையே நினைத்துக் கொண்டிருந்தால் தேவையில்லாத மன உளைச்சல்தான் வரும். அதனால் முன்னெச்சரிக்கையாக இருந்துவிடுவது நல்லது. (இந்த அட்வைஸ் எனக்கும் சேர்த்துத்தான்...ஏன்னா நானும் பயந்தாங்குளி தான் ;))

உங்க கருத்துக்கு மிக்க நன்றி அப்சரா.

ஆமினா said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_25.html

Unknown said...

சரியான சிடுமூஞ்சி நான்...சிரிக்கவச்சதுக்கு நன்றிப்பா!ப்ளாக் நலா இருக்கு அல்கம்துலில்லாஹ்