Sunday, September 23, 2012

இஸ்ரா !!

தலைப்பைப் பார்த்ததும இது இஸ்ராவா இஸ்ரோவா .... இஸ்ரோ பற்றி இவுக  என்ன எழுதப் போறாக ன்னெல்லாம் யோசிக்காதீங்க ... அது பத்தி எழுத -ஹுசைனம்மா இருக்காங்க.... ஆக்கப்பூர்வமா என்ன எழுதன்னு தலைப்பு யோசிக்கிறாங்களே ... நம்ம சிராஜன்னே இருக்காக.. ஏன் நீங்களும் எழுதலாம்...ஆனா என் தோழி  இஸ்ராவைப் பற்றி நான் மட்டுமே எழுத முடியும்.... (ஹி ..ஹி ... இத மட்டும் தான் நான் எழுத முடியும் ;))


பெயரைச   சொல்லும்போதே மனதின் மகிழ்ச்சி  முகத்தில் புன்னகையாக வெளிப்படும்... அவளுடன் பேசிய தருணங்கள் ஒவ்வொன்றாக ஆழ்  மனதிலிருந்து நினைவில் எட்டிப்பார்க்கும்...  அந்த சிறிய பெண்ணின் கள்ளங்கபடமற்ற பேச்சுக்கள் என் கவலையைப் போக்கும்  ... அவளை நினைத்தாலே 'smiling beauty' என்று சொல்வார்களே அச்சொல்லாடல் தான் நினைவிற்கு வரும். அவளுடன் பேசுபவருக்குத் தவிர மற்றவருக்கு அவள் பேசுவது கேட்காது. அவ்வப்போது நாளை பரீட்சை இருக்கிறது என்று  சொன்னாலும் அவளது படிப்பு சம்பந்தமான எந்த வித அழுத்தத்தையும் முகத்தில் காட்டிவிட மாட்டாள். தன சந்தோஷத்தை மட்டுமே மற்றவருடன்  பகிர்ந்து தன கவலைகளை மறைக்கும் ம்ன்முதிர்ச்சியை இந்த வயதிலேயே பெற்றவள். அவள் தான் எனதருமைத் தோழி இஸ்ரா...





முதன் முதலில் அவளை சந்தித்த தருணம் இப்பொழுதும் என் நினைவில் இருக்கிறது.... வெள்ளிகிழமை தொழுகை முடிந்ததும் பள்ளியில் ஒரு அறிவிப்பு வர அதகுண்டான விளக்கத்தை என் அருகில் இருந்த பெண்ணிடம் கேட்டேன். பொறுமையாக தாழ்ந்த குரலில் விளக்கியவளின் முகத்தை அதுவரை பார்த்திராததால் ' புதிதாக அருகில் குடி வந்திருக்கிறிர்களா இதுவரை உங்களை இங்கு நான் பார்த்ததில்லையே' என்ற என் கேள்விக்கு 'நான் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதால் அடிக்கடி வர முடியவில்லை' எனத தெரிவித்தாள். அதன் பிறகு தான் அப்பள்ளி வாசலின் இமாமின் (தொழுகை நடத்துபவரின்) மகள் எனவும் தெரிவித்தாள் .  



அவ்வறிமுகத்திற்குப் பிறகு அடிக்கடி சந்திப்பு தொடர்ந்தது. அங்கு நடத்தப்படும் வெள்ளிக்கிழமை குத்பா (உரை) பற்றிய விளக்கங்கள் பலவற்றை என்னிடம் விவரித்தாள். இதற்காக தொழுகை முடிந்த பின்பும் எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு உதவினாள். இஸ்லாத்தைப் பற்றி அவளிடமிருந்து நானும் என்னிடமிருந்து அவளும் பகிர்ந்து கொண்டோம்.


இச்சந்திப்பிற்காகவே மதிய உணவு தயாரிப்பை  பள்ளிக்கு வரும் முன்பே ஓரளவு முடித்துவிட்டு கிளம்புவதற்காக காலையில் கொஞ்சம் சீக்கிரம் :(( எழும்ப வேண்டியிருந்தது .. பின்பு அதுவே நல்ல பழக்கமாக மாறிவிட்டிருந்தது (அதாவது இப்ப இல்லை....ஹி ஹி )...ஆனா ..... நல்ல வேளை ..சாப்பாடு....சாப்பாடுன்னு கிச்சனிலேயே  கிடக்காமல் இஸ்லாத்திற்காக நேரம் ஒதுக்க இறைவன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தியதை நினைத்து இப்ப மனதிற்கு திருப்தியாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ் !


நான் பள்ளிக்கு செல்ல முடியாத போதும் அவள் எனக்காக வந்து காத்திருந்ததை என்னிடம் தெரிவித்தபோது மனம் வருந்தினேன். அவள் சொல்லும்போது சிறிதேனும் கோபப்பட்டிருந்தால் வருத்தப்பட்டிருக்கமாட்டேன். ஆனா வருத்தத்துடன்  சொன்னபோது என் தலையில் 'நங் நங்' நு கொட்டனும்போல இருந்துச்சு... ( உங்களுக்கு சந்தோஷமா இருக்குமே?!) ஆனா செய்யலை.... (எப்பூடி ?)அதன் பிறகு நான் செல்லாத நாட்களில் அவளுக்கு sms அனுப்பிவிடுவேன்.


கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆன பின் அவள் அந்த தகவலை  சொன்னாள் . அவளது தந்தைக்கு பணி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும் அதனால் அவள் குடும்பத்தினர் அனைவரும் அவளது தாய் நாட்டிற்குத திரும்பி செல்லவிருப்பதாகவும் தெரிவித்தாள். அதைக் கேட்டதும் மனதிற்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. நெடுநாள் தொடர்ந்த நட்பில் பிரிவேற்படப்போவதை எண்ணி இருவருக்கும் மனம் கனத்து விட்டது. 


இந்த பிரிவு அவள் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு உடனே நம்பமுடிவதாக இல்லை. சொல்லப்போனால் இந்நாட்பில் பிரிவு ஒன்று இருக்குமானால் அது நாங்கள் இந்தியா திரும்பும்போதுதான் அமையும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் என்றேனும் ஒருநாள் நான் சொல்லவிருந்த  அவ்வார்த்தைகள் அவளிடமிருந்து வந்தது எனக்கு ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்தது ஏனெனில் அவள் வேற்று நாட்டை சேர்ந்தவள் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.   சிறிது நேரம் என்ன பேசுவது என்றே எனக்குத் தோன்றவில்லை. பிறகு சுதாரித்து உனது தாய் நாடு எது எனக் கேட்டேன்.. அது....


இன்ஷாஅல்லாஹ், அடுத்த பதிவில்....

படங்கள்  கஊகிளில் கிடைத்தவை