Monday, March 9, 2015

நிர்பயா ஒத்துழைத்திருக்கலாம்:முகேஷ் சிங்

டெல்லியில் நிகழ்ந்த போராட்டம்
காந்தி, நேரு முதல்
இன்றைய சீமான் வரை
அவர்களது சிறைக்காலத்தில்
பூத்த புத்தகங்கள் பல.


போகட்டும்; புத்தகம் எழுத வேண்டாம்-
புத்தியைக் கொண்டு
தான் செய்த பிழைகளையேனும்
திருத்தியிருக்கலாம்; குறைந்தது
தனக்குள்ளேனும்
கூனிக்குறுகியிருக்கலாம்.


இது எதுவுமேயின்றி,
ஜனாதிபதியின் கருணை 
தன்னைக் காக்கும் என்று
திமிரெடுத்து வெறிபிடித்து
கல்லையே மனதாக்கி
வலிகளையும் மிதிகளையும் 
கதறலையும் கெஞ்சலையும்
ரசித்து அலறலையே 
அமிர்தமாக அருந்தி 
மனிதத்தையும் நிர்பயாவையும்
குற்றுயிருடன் சாலையில் வீசியெறிந்தது எதற்காக?


இதுவரை இப்படியொரு
கற்பழிப்பைக் கண்டதேயில்லையென
உலகின் மருத்துவர்களிடம்
சான்றிதழ் பெறுவதற்கா?


சிறையிலமர்ந்து
சிறிதும் ஈவிரக்கமின்றி
அவ்வப்பாவியின் மீதே
பழி போடுவதற்கா?


பெண்களின் ஆடையே 
ஆண்களின் பிழைகளுக்குக்
காரணம் என்று 
தத்துவத்தை உதிர்ப்பதற்கா?


பெண்கள் அனைவரும்
பர்தா அணிந்தால்
கற்பழிப்புகள் ஒழிந்துவிடுமா?


இரவில் பெண்ணுக்கு
வெளியே என்ன வேலை
என்போரே -
பகலில் மட்டும்
பாதுகாப்புண்டா
அவளுக்கு?


உடலில் வலியையும்
மனதில் தோல்வியையும்
மட்டுமின்றி
தான் சுமக்கவேண்டிய 
குற்றவுணர்ச்சியையும்
அவள் மீது சுமத்தி
பெருமையுடன் 
பேட்டியளிப்பவனைப்
பரிவோடும் பாதுகாப்போடும்
இன்றும் ஊட்டி வளர்க்கும்
பார் போற்றும் நாடு
நம் இந்திய நாடு.


பாதிக்கப்பட்டவர்களை விட
பாதிப்பேற்படுத்தியவர்கள் மீதே
அதிகக் கருணை காட்டும் நாடு
பார் போற்றும் நம் பாரத நாடு.

எழுத எழுத தீரவேயில்லை
அவர்களது வெறியும்
நமக்கு ஆற்றாமையும்..........................

No comments: