(சமீபத்தில் ஓர் உண்மைச்சம்பவம் படித்தேன். அதனைத் தழுவி எழுதப்பட்டது.)
ஒரு முஸ்லிமல்லாத பெண் என்னை நோக்கி வேகமாக வந்து “இந்த பர்தாவையும் முக்காடையும் ஏன் அணிகிறாய்?” என்றார். அவரது வார்த்தைகளில், இந்த பர்தா எனும் கட்டுப்பாடுகளில் இருந்து என்னைப் பாதுகாக்கும் அக்கறையும் என்னை அடிமைப்படுத்துவதாக அவர் நினைத்துக்கொண்டவர்கள் மீது கோபமும் எனக்குப் புரிந்தன.
என் மீதான அவரது அக்கறையும் யாரோ மீதான அவரது கோபமும் அவருக்குத் தேவையற்றது என்பதை நான் அறிவேன். அவர் கேட்டவுடன் இது என் மார்க்கம் எனக்குக் கட்டளையிட்டுள்ள ஒரு வழிமுறை; பாதுகாப்புக்கவசம்; என் இறைவனின் வார்த்தை; எனக்கான கண்ணியம் என்றெல்லாம் அவரிடம் கூறிவிட ஆசைதான். ஆனால் அதனை அவர் புரிந்துகொள்வார் என்று எனக்குத் தோன்றவில்லை.
அதனால் ஒரே வாக்கியத்தின் மூலம் இவ்வனைத்தையும் அவரிடம் தெரிவிக்கத் துடித்தேன். அந்த பதிலானது அவரிடம் இருந்து எந்த பதிலையும் எனக்குத் தரக்கூடாது. அந்த பதில் இவ்வனைத்தையும் அவருக்குப் புரியவைத்துவிட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை அல்லாஹ் எனக்கு அச்சமயத்தில் கற்பித்தான்.
“இது எனக்குப் பிடித்திருக்கிறது”
அவ்வளவுதான்.. அவ்வளவுதான் என் பதிலாக இருந்தது. என் புன்னகையுடன் வெளிவந்த அந்த பதிலில் அவர் கட்டுண்டார். மறுவார்த்தை கூறாமல் வந்த வழியில் திரும்பிச்சென்றுவிட்டார். நிச்சயம் என் பதில் அவர் மனதை அசைத்திருக்கும். மேற்கூறிய அந்த அக்கறையும் கோபமும் தணிந்திருக்கும், இன்ஷா அல்லாஹ்.